ஒவ்வொரு நிமிடமும் ஒரு மரணம்
சமூக மருத்துவன்
ராஜம்மாளின் சளி பரிசோதனையில் டி.பி கிருமிகள் இருப்பதாக முடிவு வருகிறது, மருத்துவ அலுவலர் அதனை பார்த்துவிட்டு மீண்டும் மாவட்ட மருத்துவமனைக்கு ராஜம்மாளை பரிந்துரை செய்து அனுப்புகிறார். தாங்கள் மாவட்ட மருத்துவமனைக்கு வருவதாகவும் தங்களுக்கு உதவுமாறும் முருகன் வேலுசாமிக்கு போன் மூலம் தகவல் கொடுத்துவிட்டு அடுத்த நாள் காலை அங்கு செல்கிறான்.
மாவட்ட மருத்துவமனையில் காசநோய்க்கான மருத்துவர் ராஜம்மாளை பரிசோதித்து பார்க்கிறார். TB யின் பாதிப்பு அதிகமாகி உள்ளது என்றும் அதற்கு CT ஸ்கேன் எடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். TB யின் பாதிப்பு ஏன் அதிகமானது என முருகன் மருத்துவரிடம் கேட்கிறான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலும், போதிய சத்தான உணவு இல்லாததாலும், ஒழுங்கான, முறைப்படியான சிகிச்சை பெறாததாலும் TB கிருமி, மூளை, மூளை சவ்வுகள், இனப்பெருக்க உறுப்புகள், சிறுநீரகம், எலும்புகள், குடல் போன்ற அனைத்து பகுதிகளையும் தீவிரமாக தாக்கும் வாய்ப்புள்ளது. ஆண்களும், பெண்களும் TB யால் சம எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டாலும், மிக சில பெண்களே TB யை கண்டறிந்து அதற்கான முழு சிகிச்சையையும், பெற்றுக் கொள்ளக்கூடிய ஏற்றத்தாழ்வான சூழல் நிலவுகிறது என மருத்துவர் விளக்குகிறார்.
பின்னர் TB ஸ்கேன் பிரிவிற்கு சென்று ஸ்கேன் எடுப்பதற்கு பெயரை பதிவு செய்யும்பொழுது ரூ. 500 கொடுக்குமாறு கேட்கிறார்கள். அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று முருகன் கூறுகிறான். பணம் இல்லையெனில் CT ஸ்கேன் எடுக்கமுடியாது என்று மறுக்கின்றனர். எங்களைப் போன்ற அன்றாடக் கூலித் தொழிலாளர்களால் விலை உயர்ந்த மருத்துவப் பரிசோதனைகளையும், மாத்திரைகளையும் தனி யாரிடம் வாங்க முடியாது என்பதால் தான் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக சிகிச்சை பெற வருகிறோம். இங்கேயே இப்படி அதிகமான பணம் கேட்டால் நாங்கள் எங்குதான் செல்வது என முருகன் புலம்புகிறான். முருகனின் வறிய நிலையைப் புரிந்துகொண்டு வேலுசாமி CT ஸ்கேனுக்கான பணத்தைக் கொடுத்து ஸ்கேன் எடுக்க உதவுகிறான். மருத்துவர் அந்த ஸ்கேன் முடிவை பார்த்துவிட்டு, TB நோய் மூளை சவ்வுகளை பாதித்து இருக்கிறது என்றும், மாத்திரைகள் ஒழுங்காக சாப்பிடாததே இதற்குக் காரணமெனவும் கூறுகிறார். இதற்குத் தீவிரமான சிகிச்சை அவசியம் எனக் கூறி ராஜம்மாளை மருத்துவமனையில் அனு மதிக்கிறார்கள்.
ராஜம்மாளை நலம் விசாரிக்க அடுத்த நாள் காலை சென்னப்பனுடன் மருமகள் சங்கீதாவும், இரண்டு பேரக்குழந்தைகளும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். பின்னர் முருகன் தனது மகனை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்து செல்கிறான். விக்னேசுக்கு கழுத்தில் சின்ன கட்டிகள் இருப்பதாவும், அவன் ஒருமாதகாலமாக சரியாக சாப்பிடுவதில்லை எனவும், மருத்துவரிடம் கூறுகிறான். மருத்துவர் விக்னேசை பரிசோதித்து விட்டு, இந்த கட்டிகள் TB கட்டிகளாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். தனது தாய் ராஜம்மாளிடமிருந்து TB, விக்னேசுக்கு பரவியிருக்குமா என முருகன் கேட்கிறான். ஆமாம், சளியில் TB கிருமியிருக்கும் ஒரு நபர் ஆண்டொன்றுக்கு 10 லிருந்து 15 நபர்களுக்கு TBயை பரப்பகூடிய வாய்ப்பு இருப்பதாகவும், நீங்கள் அனைவரும் ஒரே வீட்டில் நெருக்கடியான ஆரோக்கியமற்ற சூழலில் வாழ்வதால் ராஜம்மாளிடமிருந்து விக்னேசுக்கு பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் மருத்துவர் கூறிகிறார்.
BCG எனும் தோல் தடுப்பூசியை கொடுப்பதன் மூலம் காசநோயை தடுக்கலாம் என அரசு விளம்பரம் செய்கிறது. என்னுடைய மகனுக்கு, அவன் பிறந்தவுடன் BCG- யை கிராம சுகாதார செவிலியர் வீட்டில் வந்து போட்டார்கள். ஆனால் அவனுக்கு TB கட்டி எப்படி வந்திருக்கும் என முருகன் மருத்துவரிடம் கேட்கிறான். ஆரோக்கியமில்லாத நமது சுற்றுச்சூழலில், TB கிருமி காற்றில் கலந்து இருப்பதால், குழந்தை பிறந்தவுடன் தன் முதல் சுவாசத்தை எடுக்கும் பொழுதே BCG- யை கொடுக்கவேண்டும். அதே சமயத்தில் TB-க்கான தடுப்பூசி மற்றும் TB யை குணமாக்கக்கூடிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே முன்னேறிய நாடுகளில் TB-ன் தாக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
நம் நாட்டில், மற்றவர்களுக்கு TB-யை பரப்பக்கூடிய தீவிர நோய்கண்டவர்கள் அதிகமாக இருப்பதாலும், பிறந்தவுடன் அனைவருக்கும் தடுப்பூசி கொடுக்கும்படியான நம் உள் கட்டமைப்பு வளர்ச்சியடையாததாலும், மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பதாலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தரமான ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காமல் இருப்பதாலும், தடுப்பூசி மூலம் மற்ற வியாதிகளை கட்டுப்படுத்தி யதைப்போல் TB யை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் BCG யை கொடுப்பதன் மூலம் தீவிரமான காசநோயை வெகுவாகக் குறைத்திருக்கிறோம் என்பதை கடந்த கால அனுபவங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுவதால், குழந்தை பிறந்தவுடன் அனைத்து குழந்தைகளுக்கும், BCG எனும் தோல் ஊசியை இடது மேல் கையில் தவறாமல் கொடுக்க வேண்டுமென மருத்துவர் கூறுகிறார். விக்னேஷின் கழுத்திலுள்ள கட்டியிலிருந்து ஊசி மூலம் சிறிய சதையை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள். நான்கு நாட்கள் கழித்து அக்கட்டிகள் TB கட்டிகள்தான் என முடிவு தெரிந்தவுடன் ஆறு மாதகாலத்திற்கு TB மருந்து சாப்பிடவேண்டுமென அறிவுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை சீட்டு கொடுத்து அனுப்புகிறார்கள்.
இவ்வளவு அறிவியல் வளர்ச்சியடைந்த பிறகும், ஒவ்வொரு வருடமும் 18 லட்சம் பேர் TB யால் பாதிக்கப்படுவதையும், அதனால் பலர் இறக்கக் கூடிய சூழலையும் ஏன் இன்னும் நம்மால் மாற்ற முடியவில்லை என முருகன் வேலுசாமியிடம் கேட்கிறான். ஒரு நபர் TB -யால் பாதிக்கப்பட்டு ஆறு மாத காலம் தொடர்ந்து அதற்கான மருந்தை எடுத்துக்கொண்டால், TB -யிலிருந்து முழுமையாக குணமடையக்கூடிய சூழலில், TB நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்தை தயாரித்து கொடுத்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு, இந்நாட்டு மருந்து நிறுவனங்களுக்கும், ஸ்கேன் நிறுவனங்களுக்கும், பல லட்சம் நோயாளிகள் ஒவ்வொரு வருடமும் உருவாகிக் கொண்டிருந்தால் மட்டுமே தொடர்ந்து கொள்ளை லாபத்தை ஈட்ட முடியும்.
இந்த லாப வேட்டையில் உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, பல நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் முதலாளிகளுக்கு சாதகமான கொள்கைகளை உருவாக்கி, அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்ற சூழலில் அதை மாற்றுவதற்கு ஒருபோதும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என வேலுசாமி கூறுகிறான். இவ்வளவு அநியாயங்கள் நடக்கிறதா, இதை தட்டி கேட்க யாருமே இல்லையா என முருகன் ஆதங்கப்படுகிறான். பன்னாட்டு, இந்நாட்டு பெரும் முதலாளிகளின் நலனுக்கு எதிராகவும், நம் போன்ற அன்றாடக் கூலிகளின் நலனில் அக்கறையுள்ள, கொள்கை பிடிப்புள்ள கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த அநியாயங்களை ஒழிக்க முடியுமென வேலுசாமி கூறுகிறான்.
சில நாட்கள் கழித்து ராஜம்மாளுக்கு உடல் நிலை முன்னேறியவுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். போதுமான கல்வியறிவு, விழிப்புணர்வு இல்லாததாலும், சமூகப் பொருளாதார காரணங்களால் ஆரோக்கிய மற்ற சூழலில் வாழ்வதாலும் TB யின் பாதிப்புக்கு உள்ளான ராஜம்மாளுக்கும், விக்னேசுக்கும் வேலுசாமி தன்னுடைய நேரடி கண்காணிப்பில் தொடர்ந்து மருந்து கொடுத்து வருகிறான். ஆறு மாதம் கழித்து இருவரும் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் முழுமையாக குணமடைந்து விட்டதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு மருந்தை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் கொடுத்து முழுமையாக குணமாக்கியதால், வேலுசாமிக்கு ரூ. 400 (ஒரு நபருக்கு ஆறு மாதம் மருந்தை கொடுத்து குணமாக்கினால் ரூ. 200) என அரசின் சன்மானமாக வழங்கப்படுகிறது. அந்தப் பணத்தை முருகன் குடும்பத்துக்கே கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய பயணத்தை வேலுசாமி தொடர்கிறான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|